சென்னை: பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு உதவும் மத்திய அரசு விலை உயர்வை எதிர்கொள்ள முடியாத வாழ்க்கை நெருக்கடிக்கு ஆளாகி வரும் மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட முறை விலை உயர்த்தப்பட்டு தற்போது ஒரு சிலிண்டர் பெற ரூ.1050 வரை செலவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்வதைத் தொடர்ந்து உணவுப் பொருள்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வருகின்றன.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் மத்திய பாஜக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு உதவும் மத்திய அரசு விலை உயர்வை எதிர்கொள்ள முடியாத வாழ்க்கை நெருக்கடிக்கு ஆளாகி வரும் மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும் மறுகண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கும் மத்திய அரசின் வஞ்சக நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.