விவசாயத்துக்கு நெருக்கடி கொடுக்கிறதா வனத்துறை? குளத்தை பாதுகாக்க போராடும் குமரி விவசாயிகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் சுமார் 4,500 குளங்கள் என நீராதாரங்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால் அணைகள் தூர்வாரப்படாமலும், நூற்றுக்கணக்கான குளங்கள் ஆகிரமிப்பின் பிடியிலும் உள்ளன. குளத்து பாசனம் மூலம் நெல் விவசாயம் செய்யும் வயல் பகுதிகளுக்கு ஏலா (புரவு) எனவும். அணை தண்ணீர் மூலம் நெல் விவசாயம் நடக்கும் பகுதி புதுவயல் எனவும் அழைக்கப்படுகிறது. இப்போது அணைத் தண்ணீர் தேவைப்படும் காலத்தில் கிடைக்காமல் போனதால் புதுவயல்கள் பெரும்பாலும் தென்னை, வாழை போன்ற மாற்றுப்பயிருக்கு மாறிவிட்டன.

பெரியகுளம் ஏலா

குளங்களை ஒட்டிய ஏலா பகுதிகளில் மட்டுமே இப்போது நெல் விவசாயம் உயிர்ப்புடன் உள்ளது. அதில் மிக முக்கியமானது மணவாளக்குறிச்சி பெரியக்குளம் ஏலா. சுமார் 150 ஏக்கரில் பரந்துகிடக்கும் பெரியளத்தை ஒட்டி சுமார் 1000 ஏக்கர் வயல்வெளி விரிந்துகிடக்கிறது. குளத்தின் கரையில் இசக்கி அம்மன் கோயிலும் அமைந்துள்ளது. மாவட்டத்தில் பெரிய அளவிலான நெல் விவசாயத்துக்கு ஆதாரமாக விளங்கும் பெரியகுளத்துக்கு வள்ளியாற்றில் இருந்து தண்ணீர்வருகிறது. குளத்தின் மறுகாலும் வள்ளியாற்றில் பாய்ந்து செல்லும்படி இயற்கையாகவே அமைந்துள்ளது. எக்காலத்திலும் வற்றாத பெரியகுளத்தை, ஈரநில பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வனத்துறை தனது கட்டுப்பாட்டில்கொண்டுவர முயல்கிறது. அப்படிவரும்போது குளமும் அழிந்து விவசாயமும் நசிந்துபோகும் என விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள்.

“பெரியகுளத்தை பாதுகாப்பதற்காக விவசாயிகள் சேர்ந்து ‘பெரியகுளம் ஏலா சங்கம்’ வைத்திருக்கிறோம். இந்த சங்கம் தொடங்கி சுமார் 35 வருஷத்துக்கு மேல இருக்கும். தமிழ்நாட்டிலேயே ஒரு குளத்தை பாதுகாக்க சங்கம் இங்க மட்டும்தான் இருக்கிறது என நினைக்கிறேன். நாஞ்சில்நாட்டுக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக இருப்பது பெரியகுளம் ஏலா. சேரமான்பெருமாள் மன்னர் ஆண்ட சேரமங்கலம் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க இந்த குளம் அமைந்திருக்கிறது. பெரியகுளத்துக்கு நாலு மடைகள் இருக்கு. அதில ஒன்னு பெரிய கால்வாய்க்கு தண்ணிபோகிற பெரியமடை. பழையகாலத்தில குளத்தில முங்கித்தான் இந்த பெரிய மடையை திறக்கணும். அந்த மடையை எல்லாரும் திறக்கமுடியாது. குறிப்பிட்ட ஒருத்தர் மூணு, நாலு நாளு இசக்கி அம்மை கோயிலில் விரதம் இருந்துதான் திறக்கணும். இல்லைன்ன திறப்பவரை தண்ணீர் இழுத்துக்கொண்டு போயிரும்ங்கிறது ஐதீகம்.

இப்ப மேல இருந்து திறக்கிறதுமாதிரி ஷட்டர் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இசக்கி அம்மன் கோயிலுக்கும் இந்த ஏலா வரலாற்றுக்கும் தொடர்பு இருக்கிறதா இங்குள்ள பாறையில கல்வெட்டுல செதுக்கி வச்சிருக்கிறாங்களாம். வள்ளியை இந்த ஆறு வழியாக இசக்கி அம்மன் இழுத்துக்கிட்டுவந்தாராம். இந்த பகுதியில வரும்போது ஒரு இரவோடு இரவாக இந்த குளத்தையும், ஆயிரம் ஏக்கர் ஏலாவையும இசக்கி அம்மன் உருவாக்கினதாகவும். விடியற்காலை நேரம் ஆகிவிட்டதால் கையில் இருந்த பூவால் அருகில் பூவாடின்னு ஒரு ஏலா பகுதியை உருவாக்கியதாகவும் ஐதீகம்.

விவசாயி புலவர் செல்லப்பா

வேற ஏலாக்களில எல்லாம் வாழை போன்ற பயிர்கள் வைக்க தொடங்கிட்டாங்க. ஆனா, பெரியகுளம் ஏலாவுல ஆயிரம் ஏக்கர் நிலத்திலயும் நெல்லை தவிர வாழையோ, கீரையோ நட அனுமதி கிடையாது, யாரும் நடவும் மாட்டாங்க. அவ்வளவு ராணுவ கட்டுப்பாட்டோட ஏலாவை பாதுகாத்துட்டு வர்றோம். இந்த நிலையிலதான் தமிழ்நாடு ஈர நில பாதுகாப்பு சட்டம் 2017 படி இந்த குளத்தை வனத்துறை கையகப்படுத்த முயற்சி செய்யுது. அதுக்கு நாங்க எதிர்ப்பு தெரிவிச்சிருக்கிறோம். நாஞ்சில்நாட்டை நெற்களஞ்சியமாக ஆக்கிக்கொண்டிருப்பது தேரூர் குளம். அந்த தேரூர் குளத்தைப்போன்று பல குளங்களை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். அதன்பிறகு அந்த குளங்கள் தூர்வாரப்படாமல் முட்செடிகள் படர்ந்துகிடக்கின்றன. அங்கு பறவைகள்தான் குடியிருக்க முடியுமே தவிர விவசாயிகளின் குடி வாழ்வதற்கு இடம்கிடைக்காது. பெரிய குளத்தை வனத்துறை கையகப்படுத்தினால் விவசாயத்துக்கு நினைத்த நேரத்துக்கு தண்ணீர் திறக்கமுடியாது. குளத்தை தூர்வார வனத்துறை அனுமதி கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கும். மொத்தத்தில குளத்தை நாசம்பண்ணி, எங்க விவசாயத்தையும் நாசம்பண்ணிடுவாங்க.

பேச்சிப்பாறை அணையில கடந்த பத்து பதினைஞ்சு வருஷமா மண்ணு நிரந்துகிடக்கு. மூணு, நாலு கலெக்டர் முயற்சி செய்தும் அந்த மண்ணை எடுக்க வனத்துறை விடல்ல. வனத்துறைக்க கட்டுப்பாட்டுல உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில சுமார் பத்து அடி மண்மூடி கிடக்கு. அந்த மண்ணை எடுத்து அணையில முழு கொள்ளளவு தண்ணி நிரப்பினா ரெண்டு போகம் நெல் சாகுபடிக்கு தாராளமா தண்ணி கிடைக்கும். பேச்சிப்பாறை அணையை தூர்வாரவிடாத, அங்க நீர்வளத்தை பெருகவிடாத வனத்துறை, ஈரநிலத்தை பாதுகாப்பதாக இங்க எப்படி வரலாம்” என கோபப்படுகிறார் குமரி மாவட்ட பாசனை சபை கூட்டமைப்பு மாவட்ட தலைவர் புலவர் செல்லப்பா.

குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா

நெல் விவசாயிகளின் குற்றச்சாட்டு குறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜாவிடம் பேசினோம், “வன உயிரின பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சுசீந்திரம் தேரூர் உள்ளிட்ட 11 குளங்கள் பறவைகள் பாதுகாப்பு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில பறவைகள் எண்ணிக்கை அதிகமா இருக்கிறதுனால அறிவிச்சிருக்கிறோம். அதில தூர் வாருறதுல ஒரே ஒரு நிபந்தனைதான். மற்ற குளங்களில் தூர்வாரி அதை வெளிய எங்கயாவது கொண்டுபோவாங்க. வனத்துறையை பொறுத்தவரை பாதுகாக்கப்பட்ட இடத்தில இருந்து எந்த பொருளும் வெளிய போகக்கூடாது. அதனால வனத்துறை குளங்களில தூர்வாரி அந்த மண்ணை குளத்துக்கு நடுவில குவித்து வைத்து சின்ன தீவுமாதிரி ஏற்படுத்துவோம். அதில மரம் வச்சுவிட்டா பறவைகள் கூடுகட்டி வசிக்கும். இதுமட்டும்தான் வனரத்துறையின் கீழ் இருக்கும் குளத்தோட நிபந்தனை.

ஈரநிலங்களை பாதுகாத்தால் வெள்ளம் அங்குவந்து தேங்கும். சென்னை மாதிரிபட்ட இடங்களில அதிகமா வெள்ளம்வருதுன்ன ஈரநிலங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களா மாறினதுதான் காரணம். அதனால அரசாங்கம் இப்ப ஈரநிலங்களை பாதுகாக்குறதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கு. அதன் அடிப்படையில 2017-ல ஈர நிலங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவந்திருக்காங்க. அதில பாதுகாக்க வேண்டிய குளங்களை தேர்ந்தெடுத்து ஈரநில பாதுகாப்பு குழு ஏற்படுத்துறாங்க. அதுக்கு கலெக்டர் சேர்மன், டி.எஃப்.ஓ உறுப்பினர் செயலர். அதில பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளும் உறுப்பினரா இருப்பாங்க. இந்த குழுதான் தீர்மானம் எடுக்கும். அதனால முழுக்க முழுக்க வனத்துறை கட்டுப்பாட்டில குளம் இருக்காது. மனிதனால் உருவாக்கப்பட்ட குளங்கள், முழுவதும் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும் குளங்கள் இதெல்லாம் இதில கொண்டுவரமுடியாது. இயற்கையான குளங்களைதான் கொண்டுவர முடியும்.

வெள்ளக்காடான குமரி

அப்பிடி கொண்டுவரும்போது எல்லா டிப்பார்ட்மெண்டும் தடை இல்லைன்னு சொல்லி, கலெக்டர் அனுமதி கொடுத்தால்தான் அதை முடிவு பண்ணுவாங்க. பறவைகள் பாதுகாப்பு மையங்களாவது பாதி எங்ககிட்ட இருக்கும். ஆனா ஈர நில பாதுகாப்பு பகுதி முழு கட்டுப்பாடு எங்ககிட்ட வராது. ஈர நில பாதுகாப்பு பகுதியில ஆக்கிரமிப்பு வரக்கூடாது. கழிவுகள் கலக்க அனுமதிக்ககூடாது என்பது போன்ற ஏழுகட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி, ராஜாக்கமங்கலம், பெரியகுளம் ஆகியவற்றை ஈர நில பாதுகாப்பு மையங்களா அடையாளப்படுத்தினோம். மணக்குடி காயலுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. மணவாளக்குறிச்சி பெரியகுளம் விவசாயத்துக்கு பயன்படுத்துவதாக எதிர்ப்பு வந்ததால இன்னும் புரப்போசல் அனுப்பாம இருக்கிறோம். ஈர நில பாதுகாப்பு மையமாக வந்தால் குளம் பாதுகாக்கப்படுமே தவிர வேற எதுவும் ஆகாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.