கோவை, மதுரை, சென்னை போன்ற மாவட்டங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் பணி துவங்கப்பட உள்ளது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி வாலாங்குளம் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கராவிடம் கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து ஆடிஸ் வீதியில் நூலக அறிவுசார் மைய கட்டிட பணி மற்றும் வடவள்ளி ரேவதி நகரில் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதையடுத்து கோவை மாநகராட்சி வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5.59 கோடி மதிப்பீட்டில் 9 முடிவுற்ற பணிகள் திறப்பு விழா பெற்றது, மேலும், 49.62 கோடி மதிப்பீட்டில் 263 புதிய திட்டப்பணிகள் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் 18 பேருக்கு வாரிசு பணி நியமன ஆணை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே என் நேரு பேசும்போது, “கோவைக்கு 591.45 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் இந்த ஆண்டு புதிய திட்டங்கள் 24 ஆயிரம் கோடி செலவில் துவங்கப்பட்டுள்ளது. பில்லூர் குடிநீர் திட்டம் 780 கோடி செலவில் ஒரு வருடத்தில் நிறைவடையவுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மந்தமாக உள்ளது என்றார்கள் அதை இன்று பார்வையிட்டோம்.
சிறுவாணி அணை தொடர்பாக கருணாநிதி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தப்படி தண்ணீர் தரவில்லை. நமது முதல்வர் ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்திற்கு இன்னும் பதில் சொல்லவில்லை. இனி அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெரும் முயற்சி எடுக்கப்படும்.
மாநகராட்சியில் செய்யாத பணிகளை செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும். அதைப்போல ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடுகள் உள்ளதா என்பதை அதிகாரி நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர், அறிக்கை இன்னும் வரவில்லை, எங்கு தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை மாநகராட்சியில் ஐந்து முக்கியமான சாலைகளை இணைக்கும் விதமாக 145 கோடி திட்டம் துவங்கப்பட உள்ளது. மேலும், கோவை, மதுரை, சென்னை போன்ற இடங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி துவங்கப்பட உள்ளது. அதற்கான ஹைதராபாத்தில் சென்று அதிகாரிகள் பார்த்து வந்துள்ளனர். வெள்ளலூர் குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் பணி துவங்கப்படும். அதேபோல குப்பையை மறு சுழற்சி செய்யப்படும்” என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM