சார்தாம் யாத்திரை 2022- வேத மந்திரங்கள் முழங்க பத்ரிநாத் கோயில் நடை திறப்பு

டேராடூன்:
புகழ்பெற்ற புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. இந்த 4 தலங்களை உள்ளடக்கிய புனித யாத்திரை ‘சார்தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. அதிக பனிப்பொழிவு காரணமாக மழை, குளிர்காலங்களில் 6 மாத காலம் மூடப்படும் இந்தக் கோயில்கள், கோடை காலத்தில் திறக்கப்படுவது வழக்கமாகும்.
அவ்வகையில் சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோயில் 6 மாதத்திற்குப் பிறகு இன்று பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. காலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோயில் நடை திறக்கப்பட்டது. 
கோயில் நடை திறப்பை முன்னிட்டு கோயில் முழுவதும் மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அலக்நந்தா நதிக்கரையில் கர்வால் மலைப்பாதையில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலில் பகவான் விஷ்ணு அருள்பாலிக்கிறார். 
‘சார்தாம்’ யாத்திரையின் பிற தலங்களான கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடை கடந்த 3-ந்தேதி திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.