நடிகை பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருக்கும் நடிகர் விஜய் பாபுவுக்கு கைது வாரண்ட்

திருவனந்தபுரம்: மலையாள இளம் நடிகை பலாத்கார வழக்கில் கொச்சி போலீசார் தேடிவரும் பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவர் துபாயில் இருக்கலாம் என்று கொச்சி போலீசார் கருதுகின்றனர். விசாரணைக்கு உடனே ஆஜராகுமாறு கூறி கொச்சி போலீசார் பல முறை இமெயில் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் இதுவரை அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து சர்வதேச போலீஸ் உதவியுடன் விஜய் பாபுவை கைது செய்ய கொச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று அவரை கைது செய்ய ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட பிறகு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும். இதன் பிறகுதான் சர்வதேச போலீசுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும். ரெட் கார்னர் நோட்டீசுக்கு முன்னதாக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும். இந்த நிலையில் நேற்று விஜய் பாபுவுக்கு எதிராக எர்ணாகுளம் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து இன்னும் ஒரு சில தினங்களில் விஜய் பாபுவின் புகைப்படம் உள்பட வழக்கின் விவரங்கள் சர்வதேச போலீசின் இணையதளத்தில் வெளியிடப்படும். ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டால் அவர் எந்த நாட்டில் இருக்கிறாரோ அந்த நாட்டு போலீஸ் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும். ஆனால் கைதிகளை ஒப்படைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து உள்ள நாடுகளில் மட்டுமே இதை அமல்படுத்த முடியும். தற்போது விஜய் பாபு துபாயில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. கைதிகளை ஒப்படைக்க துபாயும், இந்தியாவும் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளன. இந்த விவரம் விஜய் பாபுவுக்கு தெரியும் என்பதால் அவர் அங்கிருந்து இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாத ஏதாவது நாட்டுக்கு தப்பிச் செல்லலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே அதற்குள் அவரை கைது செய்ய கொச்சி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.