நள்ளிரவில் கொள்ளை… நடுங்கிப்போன குடும்பத்தினர் சினிமா பாணியில் ஒரு சம்பவம் !

பெரம்பலூர் அருகே தீரன் திரைப்பட பாணியில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து புகுந்த முகமூடி கொள்ளையர்கள், கத்தி முனையில் தாலிசங்கிலியை பறித்துக் கொண்டு காரையும் கடத்திச் சென்றுள்ளனர்.

பெரம்பலூர் அடுத்த அம்மாபாளையத்தில் வசித்து வருபவர் விவசாயி பாண்டியன். சனிக்கிழமை இரவு 10 மணிக்கு வழக்கம்போல் வீட்டை உள் தாழ்ப்பாள் போட்டுவிட்டு பாண்டியன் கீழ் பகுதியிலும் அவரது மனைவி, மகள், மற்றும் பேர குழந்தை ஆகியோர் வீட்டின் மெத்தையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். மெத்தைக்கு செல்லும் படிக்கட்டு வீட்டிற்குள்ளேயே உள்ளது.

அதிகாலை சுமார் சுமார் 2:30 மணி அளவில் 5 மர்ம நபர்கள், வீட்டின் கதவை எட்டி வைத்து உள் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் பாண்டியனின் முதுகில் தாக்கியுள்ளனர். கணவரின் அலறல் சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்த அவரது மனைவியையும் தாக்கிய முகமூடிக் கும்பல், 3 சவரன் தாலி செயின், ஒன்றரை சவரன் மதிப்புள்ள 2 மோதிரங்கள், செல்போன்களையும் பறித்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து அவர்களை மிரட்டி, 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரையும் கடத்திச் சென்றுள்ளது.

இதற்குள் மாடியில் இருந்த மற்றொரு செல்போன் மூலம் பாண்டியனின் மகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார், தடயங்களை சேகரித்து, மோப்ப நாயின் உதவியுடன் கொள்ளையர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்னர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.