நெட் பந்துவீச்சாளருக்கு கொரோனா உறுதியான நிலையில் பிரித்வி ஷா மருத்துவமனையில் அனுமதி..!!

மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று  இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 55-வது லீக் ஆட்டத்தில்  தோனி  தலைமையிலான சென்னை  அணியும் ரிஷப்  தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன. 

ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் காலையில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும். அந்த வகையில் டெல்லி அணியில் இன்று காலை நெட் பௌலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இருப்பினும் இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உறுதி செய்துள்ள அவர் ” தான் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் காய்ச்சலில் இருந்து குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறித்த தகவல்கள் இல்லை. சாதாரண காய்ச்சல் காரணமாகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது . 
பிரித்வி ஷா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவாரா என கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.