பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் விறகுக்காக உடைபடும் அவலம்

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஏலம் விடப்பட்ட  தமிழக மீனவர்களின்  விசைப்படகுகளை உடைத்து விறகாக விற்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் கவலையில் உள்ளனர்.

ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
image

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 200க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் ஏலம் விடப்பட்டது. அதில் 130க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நீண்ட காலமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தால் பழுது பார்க்க முடியாத நிலையில் இருந்தன.

மேலும் ஏலம் விடப்பட்ட படகுகள்  யாழ்ப்பாணத்தில் உள்ள பொம்மைவெளியில் உள்ள திறந்தவெளி பணிமனையில் பிரித்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இலங்கையில் கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாடு, விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஏலம் விடப்பட்ட படகிலிருந்து மர கம்புகள் பிரித்து எடுக்கப்பட்டு விறகாக விற்கப்பட்டு வருகின்றது. மேலும் யாழ்ப்பாணத்தில் தற்போது ஒரு கிலோ விறகு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
image

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டதற்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது தமிழக மீனவர்கள் ரத்தமும், சதையுமாக பல லட்ச ரூபாய் செலவு செய்து வாங்கிய படகுகளை உடைத்து விறகுக்காக விற்கப்பட்டு வருவது மீனவர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உடனடியாக மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.