“பல்லக்கு நிகழ்ச்சிக்கு முதல்வர் வாய்மொழியாக அனுமதி வழங்கியிருக்கிறார்..!" – தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஆதீன குரு முதல்வர் குரு பூஜையையொட்டி வருகிற 22-ம் தேதி நடைபெறவுள்ள பட்டினப்பிரவேசம் நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கடந்த மாதம் 27-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். அரசின் இந்த தடைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலுள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24 – வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம், தொண்டைமண்டல ஆதீனம் ஆகியோர் கலந்துகொண்டார்.

பட்டினப்பிரவேச

பின்னர் அனைவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது தருமபுரம் ஆதீனம், “தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு சாதனையில் நேற்றைய நாள் மீண்டும் இந்த பட்டினப்பிரவேச விழாவை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அவர்களுக்கு நமது நல்லாசிகள். இந்த விழா தொடர்ந்து நடத்தப்படும் என்ற நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முயன்றிருக்கிறார். அறநிலையத்துறை ஆணையர், செயலர் அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற வாழ்த்துகிறோம். மரபுவழிப்பட்ட இதுபோன்ற சம்பிரதாயங்களில் அரசு தன்னுடைய நிலைப்பாட்டை அவர்கள் என்றைக்குமே மாறுபாடில்லாத வகையிலிருந்தது என்பதை இதன் மூலமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

தமிழ் வழியிலேயே இருந்து அவர்களுடைய முன்னோர்கள் எந்த அளவிற்கு ஆட்சி பீடத்தை நடத்தினார்களோ… அதே வகையிலேயே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய நாள் இரவு பட்டினப்பிரவேசம் சம்பிரதாயப்படி நடைபெறும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

அவர்களுக்கு எங்கள் நல்லாசிகள். ஆன்மிக மறுப்பாளர்கள் அவர்கள் கொள்கையில் அவர்கள் இருப்பது போன்று, எங்கள் கொள்கையில் நாங்கள் இருந்து வருகிறோம். மனிதாபிமான அடிப்படையில் தோளில் சுமப்பது விமர்சிக்கப்படுகிறது. இருந்தபோதிலும், அவரவர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே சுமக்கின்றனர், இறைவன் கொடுத்த தவத்தினால் கிடைப்பது இந்த பல்லக்கு. இதை எளிமையாக நினைக்கின்றனர். தவம் உடையவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என அபிராமிபட்டர் தெரிவித்துள்ளார். பட்டினப்பிரவேசம் நிகழ்வு முந்தைய ஆதீனங்கள் நிறுத்தாமல்  செய்ததை தாங்கள் தொன்றுதொட்டு தற்போதும் செய்து வருகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.