மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் போயிசர் நகரில் ஸ்டீல் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிற்சாலை நிறுவனம் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று தொழிற்சங்க உறுப்பினர்கள் சுமார் 100 பேர் தொழிற்சாலைக்குள் நுழைந்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். மேலும், வளாகத்தையும் சூறையாடினர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, போலீஸ் குழுவினர் தொழிற்சாலைக்குள் விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
அப்போது, கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 12 போலீஸ் ஜீப்புகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கினர். இதில் சுமார் 19 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
நீண்ட நேரத்திற்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, தொழிற்சாலை வளாகத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை போலீசார் 27 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இவர்களின் மீது கொலை முயற்சி, கலவரம் மற்றும் கிரிமினல் சதி உள்ளிட்ட பல்வேறு ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்.. சென்னை இரட்டை கொலை: கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு