சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும். மேலும் இது 8-ம் தேதி புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து 10-ம் தேதி மாலை வட ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு, வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்குவங்கக் கடல்பகுதியை நோக்கி நகரக் கூடும்.