விராட் கோலி சிறந்த வீரர், அவர் நிரூபிக்க எதுவும் இல்லை – பாக்.முன்னாள் வீரர் கருத்து

மும்பை,
15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெங்களூரு அணிக்காக நடப்பு சீசனில் முதல் 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். பின்னர் பெங்களூரு அணியின் 10-வது  போட்டியில் அவர் அரைசதம் அடித்தார்.

இன்றைய போட்டியில் அவர் மீண்டும் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இந்த நிலையில் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
கோலி குறித்து அவர் கூறுகையில், “விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர் நிரூபிக்க எதுவும் இல்லை. அவர் களத்திற்கு சென்று விளையாட்டை அனுபவித்து விளையாட வேண்டும்.
அவர் ரன்களை எடுக்க மிகவும் கடினமாக முயற்சி செய்கிறார். அவர் தற்போது மோசமான பேட்டிங் ஆடுவதற்கு காரணம் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார். ஆனால் ஐபிஎல்-லில் அதை அவர் ஏற்கனவே செய்துவிட்டார். 
‘நான் விராட் கோலி, என்னால் எப்போதும் செய்து வருவதை என்னால் இப்போது ஏன் செய்ய முடியவில்லை’ என்று அவர் நினைக்கிறார். நீங்கள் ஒரு மனிதர் மட்டுமே என்பதை நீங்கள் உணரும் தருணம் இது தான்.
மனிதர்கள் தோல்வி அடைவார்கள். ஆனால் விராட் போன்ற ஜாம்பவான்கள், தோல்விகளுக்குப் பிறகு வலுவான கம்பேக் கொடுப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.  உலகம் அவருக்கு அதிக அழுத்தங்களை கொடுக்கிறது. ” என அக்தர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.