மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 54-வது லீக் ஆட்டத்தில் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி, ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக டூ பிளசிஸ் – விராட் கோலி களமிறங்கினர். ஐதராபாத் பந்துவீச்சாளர் சுசித் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன்-யிடம் கேட்ச் கொடுத்து கோலி டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் டூ பிளசிஸ் – ரஜத் பட்டிதார் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டூ பிளசிஸ் பொறுப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். டூ பிளசிஸ் – ரஜத் பட்டிதார் ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடத்தனர். அரை சதத்தை நெருங்கிய பட்டிதார் 48 ரன்களில் சுசித் பந்துவீச்சில் அவுட்டானார்.
அவரை தொடர்ந்து மேக்ஸ்வெல் களமிறங்கினார். 24 பந்துகளில் 33 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் தினேஷ் கார்த்திக் 3 சிக்சர் ,ஒரு பவுண்டரி அடித்து அதிரடி காட்டினார். 50 பந்துகளில் 73 ரன்கள் குவித்த டூ பிளசிஸ் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்கள் வில்லியம்சன் – அபிஷேக் சர்மா இருவரும் டக் அவுட்டாகி ஆரம்பத்திலே அதிர்ச்சி அளித்தனர். அவர்களை தொடர்ந்து ராகுல் திரிபாதி – மார்க்ரம் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் மார்க்ரம் 21 ரன்களில் வெளியேறினார். ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து மற்ற வீரர்கள் பெங்களூரு பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர். குறிப்பாக 17-வது ஓவரை வீசிய ஹசரங்கா 2 விக்கெட்களை அடுத்தடுத்து சாய்த்தார். சிறப்பாக பந்துவீசிய அவர் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
இறுதியில் ஐதராபாத் அணி 19.2 ஓவர்களில் 125 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.