ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் 2024-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வாரங்கலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ஆளும் டிஆர்எஸ் கட்சியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். தெலங்கானாவை தனி மாநிலமாக்கியது சோனியா காந்தி. ஆதலால், காங்கிரஸுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று ராகுல் காந்தி பேசினார்.
இந்நிலையில், நேற்று ஹைதராபாத் காந்தி பவனில் ராகுல் காந்தி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கும், டிஆர்எஸ் கட்சிகளுக்கிடையே மட்டுமே போட்டி. சர்வாதிகாரி சந்திரசேகர ராவை விரட்டி அடிக்க வேண்டும். வீட்டில் உட்கார்ந்து கொண்டு, டெல்லியை சுற்றி வந்தால் சீட் கிடைக்காது. பின் கதவு வழியே வந்து சீட் கேட்டால் கிடைத்துவிடும் என காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் நம்பிக்கையுடன் உள்ளனர். அதுவும் நடக்காது. ஒவ்வொருவர் குறித்தும் சர்வே செய்து சீட் வழங்கப்படும்’’ என்றார்.