மதுரை திருமங்கலத்தில் ஆகஸ்ட் மாதம் 25-ம் நாள் 1952-ம் ஆண்டில் பிறக்கிறார் நாராயணன். நாராயணன் என்பது தாத்தாவின் பெயர். விஜயராஜ் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. திரையில் இவரது பெயர் விஜயகாந்த்.
எம்.ஜி.ஆரின் படத்தை 70 முறை பார்க்கக் கூடியவர். ரஜினி போல ஸ்டைல் பண்ணத் தெரியும்.
சென்னைக்கு நடிக்க வந்தபோது முதலில் அவர் சந்தித்தது புறக்கணிப்பை தான். கருப்பு நிறம், பெரிய பின்புலம் இல்லை, நாடக படிப்பு இல்லை. எல்லாவற்றை மீறியும் தன்னால் முடியும் என்கிற நம்பிக்கை மட்டுமே அவரிடம் இருந்தது.
விஜயகாந்த் ஒருவேளை நடிக்க வரவில்லையென்றால் ஏராளமான இயக்குனர்கள், நடிகர்கள் என இவரால் அறிமுகம் செய்யப்பட்ட யாரும் வந்திருக்க முடியாது. விஜயகாந்த் என்கிற தனிமனிதர் இயக்கமாகத் தொடங்கியது அங்குதான்.
1979-ல் `இனிக்கும் இளமை’ படத்தில் வில்லனாக அறிமுகமானார். இயக்குனர் எம்.ஏ.கஜா விஜயராஜாக இருந்த கலைஞனை விஜயகாந்த் என திரையில் அறிமுகப்படுத்துகிறார்.
ரஜினி – கமல் என இரு பெரும் நடிகர்களுக்கு மத்தியில் விஜயகாந்த் மக்களை காந்தமாக ஈர்க்க தவறவில்லை. அவர் வீட்டில் இருந்த காலத்தைவிட படப்பிடிப்பு தளத்தில் ஓடிக்கொண்டிருந்த காலம் தான் அதிகம்.
1984 ஒரே வருடத்தில் 18 படங்கள் நடித்திருக்கிறார். இவரது 100-வது படம் `கேப்டன் பிரபாகரன்’. பட்டி தொட்டியெங்கும் படம் ஹிட். வெள்ளி விழா சாதனை கண்ட படம்.
சிறிய இயக்குனர்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுத்து படங்களை வெற்றி படமாக்க மாற்றியவர். மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், அருண் பாண்டியன், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தினார்.
1999-ல் இருந்து 2004 வரை இவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். பல ஆண்டுகளாக கடனில் இருந்த நடிகர் சங்கத்தை பல நாடுகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த செய்து நடிகர் சங்கத்தை மீட்டவர்.
`தேசிய முற்போக்குத் திராவிட கழகம்’ 2006-ல் ஒரு தொகுதியில் வென்ற விஜயகாந்த் 2011-ல் எதிர்க்கட்சி தலைவர்.
நண்பர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறார் விஜயகாந்த். ஒரு விதை விருட்சமாகும் கதை இவருக்கே பொருந்தும் கேப்டன்!