அரசு ஆஸ்பத்திரியில் பெண் நோயாளிக்கு பேய் ஓட்டிய மந்திரவாதி- டாக்டர்களுக்கு நோட்டீஸ்

போபால்:

மத்தியபிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில் 65 வயதான ஒரு பெண், உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஸ்பத்திரி படுக்கையிலேயே ஒரு மந்திரவாதி, பேய் ஓட்டும் சடங்குகளை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனது உள்ளங்கையில் இருந்து தண்ணீரை எடுத்த அவர், வாயில் ஏதோ மந்திரங்களை உச்சரித்தபடி அப்பெண்ணின் முகத்தில் தெளித்தார்.

தகவல் அறிந்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் வந்து மந்திரவாதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அப்பெண்ணின் குடும்பத்தினர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதால், இந்த சடங்கு செய்வது அவசியம் என்று அவர்கள் வாதிட்டனர். இதற்கிடையே, மந்திரவாதி பேய் ஓட்டுவதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர். இதையடுத்து, அந்த நேரத்தில் பணியில் இருந்த டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தலைமை மருத்துவ அதிகாரி நீரஜ் சாரி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.