ஏழை எளிய மக்களின் வாழ்விடங்களை மட்டும் இடித்துத் தள்ளுவதில் அவசரம் காட்டுவது ஏனோ? – மநீம.!

மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் R.தங்கவேலு இன்று விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில்  250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அந்த இடம் நீர்நிலைப் புறம்போக்கு என்றும், ஆக்கிரமிப்பு என்றும் கூறி ராஜீவ் ராய் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் சரியான வாதங்கள் வைக்கப்படாததால், வழக்குத் தொடர்ந்தவர் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த வீடுகளை அகற்ற பொதுப்பணித் துறையினர் முயற்சித்துள்ளனர்.

ஆண்டாண்டு காலமாக தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தி, அங்கு வாழ்ந்து வரும் தொழிலாளர் வர்க்கத்தினர், இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். போலீஸ் படையுடன் சென்று ஆக்கிரமிப்புகளை இடித்தபோது, வீட்டை இழந்த வேதனையால் கண்ணையா என்பவர் தீக்குளித்தது வேதனையின் உச்சம். 

தமிழகத்தில் பகாசுர நிறுவனங்கள், செல்வாக்கு மிக்கவர்கள், ஆன்மிக சேவை புரிவதாக கூறிக் கொள்பவர்கள் எல்லாம் அரசு நிலத்தை மட்டுமின்றி, யானைகள் உள்ளிட்ட விலங்குகள் நடமாடும் வனத்தையும்கூட ஆக்கிரமித்துள்ளனர். இவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல், ஏழை எளிய மக்களின் வாழ்விடங்களை மட்டும் இடித்துத் தள்ளுவதில் அவசரம் காட்டுவது ஏனோ?

ஒருவேளை நீர்நிலை ஆக்கிரமிப்பாக இருந்தால்கூட, அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, அனைவரும் அங்கு குடியேறிய பின்னரே ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டியதுதானே நியாயமான நடைமுறை? அங்கே இருப்பவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே? நம் குடும்பத்தைப் போன்ற குடும்பங்கள்தானே? அந்த வீட்டிலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இருப்பார்கள்தானே? அவர்களிடம் இவ்வளவு அடக்குமுறை காட்டப்பட வேண்டுமா?

‘‘குரலற்ற இந்த மக்களை காப்பாற்று’’ என்ற தீக்குளித்து இறந்துப்போன கண்ணையன் போன்றவர்களின் குரல்கள் அரசின் செவிகளில் எப்போதும் விழாதா?

இளங்கோ தெரு வாசிகளின் வாழ்க்கைச் சூழலை மனதிற்கொண்டு வீடுகளை இடிக்கும் பணியை அரசு கைவிட வேண்டும். இவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டிவிட்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.