சம்பாவத் இடைத்தேர்தல்: உத்தரகண்ட் முதல்வர் வேட்புமனு தாக்கல்!

உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அம்மாநில முதலமைச்சர் புஷ்கா் சிங் தாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. அதே சமயம், கதிமா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் புஷ்கா் சிங் தாமி, தனக்கு எதிராகக் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளா் புவன் சந்திர காப்ரியிடம் தோல்வி அடைந்தாா்.

எனினும், சட்டப்பேரவைத் தேர்தலை புஷ்கா் சிங் தாமி தலைமையில் எதிர்கொண்டு வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்ததால், அவரை மீண்டும் முதலமைச்சராக்க, பாஜக டெல்லி மேலிடம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, உத்தரகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக, தொடர்ந்து இரண்டாவது முறையாக, புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றுக் கொண்டார்.

இதற்கிடையே அடுத்த 6 மாதங்களுக்குள் எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், அவா் போட்டியிட வசதியாக சம்பாவத் தொகுதி எம்எல்ஏ பதவியில் இருந்து, பாஜகவைச் சேர்ந்த கைலாஷ் அண்மையில் விலகினார்.

இதை அடுத்து, சம்பாவத் தொகுதியில் வரும் 31 ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் மாதம் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் சம்பாவத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அம்மாநில முதலமைச்சர் புஷ்கா் சிங் தாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சம்பாவத் இடைத்தேர்தலுக்கு, பூர்ணகிரி தெய்வம், தேவி சாரதா மற்றும் கடவுள் கோல்ஜியு மகராஜ் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் நான் இன்று வேட்புமனு தாக்கல் செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.