திருப்பதி:
ஆந்திர மாநிலம் புத்தூரில் அரசு கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரி வளாகத்தில் புதியதாக சரஸ்வதி தேவி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் நடிகை ரோஜா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
ரோஜாவை மாணவ, மாணவிகள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது ரோஜா மாணவர்களிடையே பேசியதாவது:
என்னுடைய தொகுதியில் உள்ள புத்தூர் அரசு கல்லூரியில் கோவில் இல்லாதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
தற்போது கல்விக்கு அதிபதியான சரஸ்வதி கோவில் கட்டப்பட்டு அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் சரஸ்வதி தேவிக்கு தினமும் பூஜை செய்து வழிபட வேண்டும். சரஸ்வதிதேவி உங்களுக்கு தேவையான கல்வி, நல்ல பண்பு, ஒழுக்கத்தை தருவார்.
சரஸ்வதி அருளால் மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று நல்ல நிலைக்கு வருவீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி, கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.