சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை குளிர்வித்த மழை

சென்னை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. 
இந்தப் புயலுக்கு இலங்கை நாடு வழங்கிய ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது. அசானி என்றால் சிங்கள மொழியில் ‘பெருஞ்சினம்’ என அர்த்தமாகும்.
அசானி புயலால் தமிழகத்திலும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்துள்ளது.
அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் கடுமையில் சிக்கித் தவித்த மக்கள் நள்ளிரவில் பெய்த மழையால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.