மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றி உரையாற்றிய நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்) நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துருவுக்கு தண்ணீர் வழங்கியதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவில்,
பத்மஜா சுந்துரு
பேசிக் கொண்டிருக்கும்போது, தனது பேச்சை இடை நிறுத்தி குடிக்க தண்ணீர் வேண்டும் என்பது போல் சைகை செய்கிறார். உடனே, மேடையில் இருந்த மத்திய நிதியமைச்சர் பத்மஜா சுந்துருவுக்கு தண்ணீர் பாட்டிலை வழங்குவது போன்று உள்ளது.
இதனால், நெகிழ்ச்சியடைந்த பத்மஜா சுந்துரு, நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிக்கிறார். இதனைப் பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி நிர்மலா சீதாராமனை பாராட்டுவது போன்றும் அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிர்மலா சீதாராமனை பாராட்டியுள்ளார். நிர்மலா சீதாராமனின் பரந்த மனது, பணிவு மற்றும் முக்கிய மதிப்புகளை இந்த வீடியோ பிரதிபலிப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற என்எஸ்டிஎல்-இன் வெள்ளி விழாவைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த நிகழ்வின்போது, சனிக்கிழமையன்று மாணவர்களுக்காக ஹிந்தி மற்றும் பிற பிராந்திய மொழிகளில்
NSDL
இன் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியான ‘மார்க்கெட் கா ஏக்லவ்யா’ திட்டத்தை
நிர்மலா சீதாராமன்
தொடங்கி வைத்தார்.
“’மார்க்கெட் கா ஏக்லவ்யா’ மூலம், நிதி அறிவு தேவைப்படும் பலரை நீங்கள் சென்றடைய முடியும். சந்தையைப் பற்றியும், மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம்
என்.எஸ்.டி.எல்
எடுத்துள்ள சரியான அணுகுமுறையையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய சரியான நேரம் இது.” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.