நடிகை பலாத்கார வழக்கு காவ்யா மாதவனுக்கு மீண்டும் நோட்டீஸ்

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கு இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் நோட்டீஸ் கொடுத்து உள்ளனர். பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் தற்போது தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய குற்றப்பிரிவு போலீசுக்கு கேரள உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையே தொடர் விசாரணையில் நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உண்டு என்பதற்கான ஆதாரங்கள் போலீசுக்கு கிடைத்தன. அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் தீர்மானித்தது. அதன்படி ஆலுவா போலீஸ் கிளப்பில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி கடந்த மாதம் அவருக்கு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் தன்னால் போலீஸ் கூறும் இடத்திற்கு விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும், ஆலுவாவில் உள்ள தனது வீட்டில் வைத்து விசாரணை நடத்தலாம் என்றும் காவ்யா மாதவன் கூறினார். இதனால் விசாரணையை போலீசார் ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு ஆலுவா போலீஸ் கிளப்பில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி காவ்யா மாதவனுக்கு போலீஸ் மீண்டும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.