லைவ் அப்டேட்ஸ்; இலங்கையில் பதற்றம் அதிகரிப்பு: ஆளும் கட்சி எம்.பி சடலமாக மீட்பு, மேயர் வீட்டிற்கு தீ வைப்பு

கொழும்பு
இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் கம்புகளால் கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதற்றமான சூழலில் இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் அது தொடர்பான அண்மைச் செய்திகளை கீழ் காணலாம். 

மே 09,  9.00  PM
குருங்கலாவில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். 
மே 09,  8.30  PM

இலங்கை வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5- ஆக உயர்ந்துள்ளது. 
மே 09,  7.30 PM
இலங்கை எம்.பி சனத் நிஷாந்தா வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால்  பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
மே 09,  6.45 PM
இலங்கையில் மறு உத்தரவு வரும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக இலங்கை ரெயில்வே அறிவித்துள்ளது. இன்று இயக்கப்பட்டு வரும் ரெயில்கள் அந்தந்த இடங்கள் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மே 09,  6.40 PM
மக்களின் பாதுகாப்புக்காகவே ராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.  ராணுவத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கை ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. 
மே 09,  6.38 PM
இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அனைத்து காவலர்களுக்குமான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை காவலர்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்படுவதாக இலங்கை காவல் துறை அறிவித்துள்ளது. 
மே 09,  6.30 PM
இலங்கையில் மொரட்டுவை மேயர் வீட்டில் தாக்குதல் நடத்தி போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம். குருணாகல் மேயர் துஷார சஞ்சீவா வீட்டின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசித்தாக்குதல்
மே 09,  6.00 PM
வத்துபிடில பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மே 09,  5.00 PM
இலங்கையில்  ஏற்பட்டுள்ள  கலவரத்தில்  ஆளும்கட்சியின் எம்.பி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் உறுதிபடுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 09,   4:05 PM
பொருளாதார நெருக்கடி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா என தகவல்
மே 09,  4.00 PM
கொழும்புவில் நடந்த வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்: இலங்கை அதிபர்
மே 09,  3.30 PM
மக்கள் பொறுமை காக்க வேண்டும், வன்முறை எதற்கும் உதவாது: ராஜபக்சே சகோதரர்கள் கோரிக்கை
மே 09,   2.30 PM

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதனால் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். எனினும் மக்கள் போராட்டம் ஆங்காங்கே தீவிரமாக நடைபெறுகிறது.
அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று மகிந்த  கூறி உள்ளார்.
இந்நிலையில், கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். 
இதேபோல் பிரதமரின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு, பிரதமர் பதவி விலக வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது, மகிந்தவின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போராட்டக்காரர்களை மகிந்த ஆதரவாளர்கள் தாக்கினர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் உருவானது. போலீசார், மகிந்த ஆதரவாளர்களின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர். 
இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில், கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொழும்பு தெற்கு, வடக்கு, மத்திய பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் என காவல்துறை அறிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சே அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில்  பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நிதானமிழந்தால்  வன்முறை வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை, அதை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார் என கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.