ஈக்வடார் நாட்டில் சிறையில் பயங்கர கலவரம்: 43 கைதிகள் பலி

குய்டோ:
தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது.
தலைநகர் குய்டோவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் சாண்டோ டொமிங்கோ டிலாஸ் கொலராடோசில் உள்ள பெல்லாவிஸ்டா சிறைச்சாலையில் கைதிகளின் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டன. இதனால் அங்கு பயங்கர கலவரம் வெடித்தது.
இந்த மோதலில் 43 கைதிகள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். கலவரத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கலவரத்தை பயன்படுத்தி 200-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பினர். அவர்களில் பலரை போலீசார் பிடித்தனர். அதன்பின் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கலவரத்தை போலீசார் அடக்கினர்.
இதுகுறித்து காவல்துறை தலைவர் பாஸ்டோ சலினாஸ் கூறும்போது, ‘தப்பி ஓடிய கைதிகளில் 112 பேர் பிடிபட்டனர். 108 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடி வருகிறோம்’ என்றனர்.
கலவரத்தில் காயம் அடைந்த கைதிகள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.