#தமிழகம் || நேரடியாக போராட்டத்தில் களமிறங்கும் பாமக தலைவர்.! ஒன்று சேரும் பாமகவினர்.!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்து நாளை பாமக தலைவர் ஜி கே மணி தலைமையில் போராட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை அணுமின் நிலையத்தில் பிளம்பர், தச்சர் போன்ற சி பிரிவு பணிகளுக்குக் கூட இந்தி மொழியில் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படுவதையும், அதன் மூலம் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுவதையும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் ஆதாரங்களுடன் நேற்று டுவிட்டரில் அம்பலப்படுத்தியிருந்தார்.

1978-ஆம் ஆண்டு கல்பாக்கம் அணுமின் நிலையம் தொடங்குவதற்கான தொடக்கநிலை பணிகளும், நிலம் கையகப்படுத்துதலும் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சி மற்றும் டி பிரிவு பணிகளில் உள்ளூர் மக்களுக்கு  முன்னுரிமை அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகள் எதுவும்  இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இத்தகைய போக்கை இனியும் அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; அனைத்துத் தேர்வுகளும் தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கம் அணுமின்நிலையம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை (11.05.2022) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் துணை, சார்பு அமைப்புகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்” 

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.