நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடியில் 4 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நாள்தோறும் 5 பிரிவுகளிலும் மின்னுற்பத்தி முழு அளவில் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும்.
image
கோடைகால மின்சார தேவைக்காக ஐந்து பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், நிலக்கரியின் கையிருப்பு தட்டுப்பாட்டால் ஐந்து பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்வது கடந்த ஒரு மாதமாக தடைபட்டுள்ளது.
சில மாதங்களாகவே நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்த அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளும் முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே அனல் மின் நிலையத்தில் நான்கு அலகுகள் மற்றும் மூன்று அலகுகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது நிலக்கரி தட்டுப்பாட்டால் நேற்று 4 அலகுகள் நிறுத்தப்பட்டு ஒரு அலகில் மட்டுமே 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
image
இந்நிலையில் இன்று காலையும் 1.2.4.5 ஆகிய அலகுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலகில் மட்டுமே 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அனல் மின் நிலையத்தில் தற்போது 50 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு இருந்தும், அடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய சில நாட்கள் ஆகும் என்பதால் அதனை ஈடு செய்யும் வகையில் அலகுகள் நிறுத்தப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அனல் மின் நிலைய ஷதலைமை பொறியாளார் கிருஷ்ணகுமார் தொலைபேசியில் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.