பிளே ஆஃப் சுற்றில் சி.எஸ்.கே நுழைய முடியுமா? கூட்டல்- கழித்தல் கணக்குகள்

Chennai super kings (CSK) Tamil News: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இத்தொடருக்கான 70 லீக் போட்டிகள் மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது அடுத்த சுற்றான பிளே-ஆஃப் சுற்று எங்கு மற்றும் எந்த தேதிகளில் நடக்கிறது என்ற விவரத்தை ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதன்படி ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள்

மே 24 – குவாலிபையர் 1 – கொல்கத்தா
மே 25 – எலிமினேட்டர் – கொல்கத்தா
மே 27 – குவாலிபையர் 2 – அகமதாபாத்
மே 29 – இறுதிப்போட்டி – அகமதாபாத்

ஆகிய தேதிகளில் குறிக்கப்பட்ட மைதானங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்.

9 அணிகளின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்புகள் எப்படி?

இதுஒருபுறமிருக்க, நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்புகளுடனும், சுவாரஷ்யங்களுடனும் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் கடந்த சனிக்கிழமை (மே 7) நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் பஞ்சாப் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனால் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நடப்பு தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்ட முதல் அணி ஆனது. அந்த அணி இதுவரை நடந்த 10 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 16 புள்ளிகளைப் பெற்றுள்ளன. முதலிரண்டு இடத்தில் உள்ள அந்த அணிகள் ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளன. பட்டியலில் அடுத்த இரு இடங்களில் தலா 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் உள்ளன. அந்த அணிகள் மீதமுள்ள போட்டிகளில் ஒன்றில் வென்றாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடுவார்கள்.

டெல்லி கேபிடல்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகள் மற்றும் +0.150 நெட் ரன்ரேட்டை கொண்டுள்ளது. அந்த அணி பிளேஆஃப் தகுதியைப் பெற மீதமுள்ள மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் -0.031 ஆக உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி பிளே ஆஃப்களுக்குள் நுழைய மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வென்றாக வேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ் 11 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மேலும், அந்த அணியின் நெட் ரன்ரேட் -0.231 ஆக உள்ளது. மயங்க் அகர்வால் தலைமையிலான அந்த அணி 14 புள்ளிகளைப் பெற 2 ஆட்டங்களை வென்றாக வேண்டும்.

சென்னை அணியின் பிளேஆஃப் வாய்ப்பு எப்படி?

நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமாடி வரும் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை விளையாடிய 11 போட்டியில் 4ல் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. அந்த அணியினருக்கு மகிழ்ச்சியான விஷயம் என்னெவென்றால் நெட் ரன்ரேட் தான். நெகடிவ்வில் இருந்த நெட் ரன்ரேட் தற்போது 0.028 என பாசிடிவ்வுக்கு மாறியுள்ளது.

சென்னை அணி ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் (எதிரணி: மும்பை-மே 12, குஜராத்-மே 15, ராஜஸ்தான்-மே 20) நல்ல ‘ரன் ரேட்டில்’ வெற்றி பெற்றாக வேண்டும். அதன்பின் மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

அடுத்து வரும் போட்டிகளின் முடிவு இப்படி அமைந்தால் சென்னை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு கிடைக்கலாம்.

ராஜஸ்தான் (எதிர்: டெல்லி, மே 11),
பஞ்சாப் (எதிர்: பெங்களூரு, மே 13),
கொல்கத்தா (எதிர்: ஐதராபாத், மே 14),
டெல்லி (எதிர்: பஞ்சாப், மே 16),
மும்பை (எதிர்: ஐதராபாத், மே 17),
குஜராத் (எதிர்: பெங்களூரு, மே 19),
மும்பை (எதிர்: டெல்லி, மே 21),
ஐதராபாத் (எதிர்: பஞ்சாப், மே 22) அணிகள் வெற்றி பெற வேண்டும். இப்படி நடக்கும் பட்சத்தில் சென்னை – பெங்களூரு அணிகள் தலா 14 புள்ளிகளுடன் 4வது இடத்தை பகிரும். அப்போது சென்னை அணி நல்ல ‘ரன் ரேட்’ உடன் இருந்தால், சென்னை அணி ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.