‘ஷாஹீன் பாக்’ ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு  உட்பட்ட ஜஹாங்கீர்புரியில் வகுப்புவாத மோதல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து,  அங்குள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி மாநகராட்சி  நிர்வாகம் அகற்றியது. தற்போது இவ்விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணையில்  உள்ளது. இந்நிலையில், டெல்லியின் ஷாஹீன் பாக் (சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடந்த இடம்) பகுதியில் உள்ள சாலைகள்  மற்றும் அரசு நிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை கடந்த 5ம்  தேதி அகற்ற ெதற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் திட்டமிட்டது. ஆனால்,  போதுமான போலீஸ் பாதுகாப்பு இல்லாததால், ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டம்  ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று ஷாஹீன் பாக் ஆக்கிரமிப்பு பகுதிக்கு ஜேசிபி, புல்டோசருடன் வந்த தெற்கு டெல்லி முன்சிபல் அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.ஆனால், அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், புல்டோசர்கள் மற்றும் ஜேசிபிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றமான சூழல் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான், சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார். ஆக்கிரமிப்பு அகற்ற பதற்றத்திற்கு மத்தியில், இவ்விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஜஹாங்கீர்புரி வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பெஞ்ச் முன் மனுவை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.