ஆந்திராவில் அசானி புயலால் கடலில் அடித்து வரப்பட்ட வெளிநாட்டு தங்க நிற தேர்: உளவுத்துறை விசாரணை

திருமலை: ஆந்திராவில் அசானி புயலால் கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட தங்க நிறத்திலான தேர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தமானில் ஏற்பட்ட   குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வங்கக்கடலில்  அதிதீவிர அசானி புயலாக மாறி ஆந்திரா- ஒடிசா இடையே கரையை கடந்து வருகிறது. மேலும், ஆந்திர கடலோரப் பகுதியில் இன்று கரையை கடக்கும் என்றும், இதனால் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம், காகுளம் மாவட்டம், சுன்னப்பள்ளி கடற்கரை பகுதியில் தங்க நிறத்திலான தேர் ஒன்று நேற்று கடலில் மிதந்து வந்தது. இதனை ஆச்சரியத்துடன் பார்த்த மீனவர்களும், அப்பகுதி கிராம மக்களும் அதை கரைக்கு இழுத்து வந்தனர்.  கடலோர காவல்படை அதிகாரிகள், தேரை மீட்டு ஆய்வு செய்தனர். தேரின் மீது வெளிநாட்டு மொழியில் எழுதப்பட்டு உள்ளது. இதனால் கம்போடியா, இந்தோனேசியா, ஜப்பான் போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இது மிதந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து உளவுத் துறை துறையினரும், போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.