'இந்தி பட உலகத்தால் எனக்கு போதிய சம்பளம் கொடுக்க முடியாது'!: இந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு பேட்டி..!!

டெல்லி: இந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கூறியிருப்பது திரைத்துறையில் மீண்டும் மொழி குறித்த விவாதத்தை உண்டாக்கியுள்ளது. இந்தி மொழி திணிப்பு குறித்து இந்தி நடிகர்களுக்கும், பிற மொழி நடிகர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், நடிகர் மகேஷ்பாபு இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மகேஷ்பாபு நடித்த ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தி பட உலகம் தமக்கு போதிய சம்பளம் தர முடியாது என்பதால் அங்கு சென்று தன்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். தென் மாநிலங்களில் கிடைத்து கொண்டிருக்கும் மரியாதையே தனக்கு போதுமானது என்றும் மகேஷ்பாபு தெரிவித்திருக்கிறார். இந்த இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்வதை நினைத்து பார்க்க முடியாது என்ற அவர், தெலுங்கில் இருந்தே உலக புகழ் பெற விரும்புவதாகவும் கூறியுள்ளார். இந்தி மொழி தேசிய மொழி என்ற வாதம் கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கும், இந்தி நடிகர் அஜய் தேவ்கனுக்கும் இடையே அண்மையில் மோதல் ஏற்பட்டது. இந்திக்கு எதிராக மேலும் சில நடிகர்கள் களத்தில் குதித்தனர். இந்த நிலையில் இந்தியில் நடிக்க போவதில்லை என்று நடிகர் மகேஷ்பாபு கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.