இளம்பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மேலும் 3 பேர் கைது

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பல உல்லாச விடுதிகள் உள்ளன.

வயநாடு வரும் சுற்றுலா பயணிகள் இந்த விடுதிகளில் தங்கி மலையோர கிராமங்களுக்கு சென்று இயற்கை அழகை ரசித்து செல்வது வழக்கம்.

கடந்த மாதம் 20-ந்தேதி இந்த விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 5 பேர் தங்கி இருந்தனர்.

அன்று இரவு விடுதிக்குள் முகமூடி அணிந்த 9 பேர் கும்பல் வந்தனர். அப்போது விடுதியில் 2 ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களை தாக்கிய முகமூடி கும்பல், விடுதி அறையில் தங்கியிருந்த பெண்களை வெளியே இழுத்து வந்தனர்.

பின்னர் அவர்களை சரமாரியாக தாக்கி விட்டு ஒரு பெண்ணை மட்டும் அருகில் உள்ள அறைக்கு இழுத்து சென்றனர். அங்கு அந்த பெண்ணை முகமூடி கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் வயநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை தேடி வந்தனர்.

இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டு வந்தனர்

தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று மேலும் 3 பேர் சிக்கினர். கொயிலாண்டியை சேர்ந்த முகமது ஆசிக் (வயது 30), ரயீஸ் (31), லெனின் (35) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களை சம்பவம் நடந்த உல்லாச விடுதிக்கு அழைத்து சென்று ஆதாரங்களை திரட்டினர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மேலும் 2 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.