சேலத்தில் வருகிற 18ந் தேதி முதல் அரசு டாக்டர்கள் சம்பள உயர்வு கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

சேலம்:

அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்க கோரி, வருகிற 18ந் தேதி சேலம் மாவட்டம், மேட்டூரில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்க உள்ளனர் என அரசு டாக்டர்கள் சங்க சட்டபோராட்டக்குழு தலைவர் பெருமாள்பிள்ளை தெரிவித்தார்.

கொரேனா, 3 அலைகளின் போதும், 7½ கோடி தமிழக மக்களை காப்பாற்ற, ராணுவத்தை போல் அரசு டாக்டர்கள் செயல்பட்டனர். மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்கிய டாக்டர்களின் கேரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை.

கொரோனா முதல் அலையின்போது உயிரிழந்த அரசு டாக்டர் விவேகானந்தன் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதியோ, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்காமல் அலைக்கழிப்பு செய்து வருகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில், பணியாற்றும், 19 ஆயிரம் டாக்டர்கள் சம்பள உயர்வு கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே தமிழக அரசு சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும்.

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை முன் எடுத்து, தன் உயிரை துறந்த, அரசு பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் லட்சுமிநரசிம்மன் பிறந்த ஊரான, சேலம் மாவட்டம், மேட்டூரில் வருகிற 18ந் தேதி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்க உள்ளோம்.

இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து அரசு டாக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.