திரைவாழ்க்கையில் 20 ஆண்டுகளை கடந்த தனுஷ்

தனுஷின் திரைவாழ்க்கையில் இன்று மறக்கமுடியாத நாள். ஏனென்றால் இதே மே 10 2002 ஆம் ஆண்டில் தான் தனுஷ் நடிப்பில் துள்ளுவதோ இளமை படம் வெளியானது. திரையுலகிற்கு தனுஷ் ஹீரோவாக அடியெடுத்து வைத்த இந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ் கதாநாயகர்கள் சர்வதேச அளவில் புகழ்பெறுவது மிக அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது. அந்த அரிதான சாதனையை நிகழ்த்தியவர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் மற்றும் 'ராஞ்சனா' உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட திரை ஆளுமை ஆகியிருக்கிறார். 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்' என்னும் ஆங்கிலப் படத்தில் நாயகனாக நடித்ததவர். ஆஸ்கருக்கு பரிந்திரைக்கப்பட்ட 'விசாரணை' படத்தை தயாரித்தவர் என சர்வதேச கவனத்தையும் பெற்றிருக்கிறார். இவை தவிர திரைவாழ்வில் பன்முகத் திறமையாளராக இன்னும் பல சாதனைகளைப் புரிந்திருக்கும் தனுஷ் சினிமாவுக்கு அறிமுகமான நாள் இன்று. .

முதல் அறிமுகம்
தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்றால் கம்பீர உடற்கட்டும், வசீகர தோற்றமும் வேண்டும் எனும் தொன்றுதொட்ட மரபை தன் அசாதாரணமான நடிப்பால் மாற்றியமைத்தவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், முதல் படத்திலேயே வெற்றி நாயகனாக உருவெடுத்தார். முதல் படம் வெற்றி பெற்றாலும் தனுஷின் தோற்றத்தை வைத்து அவரை கேலி பேசியவர்கள் ஏராளம்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் 'என் ராசாவின் மனசிலே', 'ஆத்தா உன் கோயிலிலே', 'எட்டுப்பட்டி ராசா', 'நாட்டுப்புறப் பாட்டு' என கிராமிய மணம் கமழும் வெற்றித் திரைப்படங்களைத் தந்தவரான கஸ்தூரி ராஜா நகர்ப்புற விடலைகளின் வாழ்வை மையமாக வைத்து இயக்கிய திரைப்படம்தான் 'துள்ளுவதோ இளமை'. அவருடைய மூத்த மகனும் இன்று புகழ்பெற்ற இயக்குநர்களில் முக்கியமானவருமான செல்வராகவன் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி தமிழ் சினிமாவில் அதிகாரபூர்வமாக காலடி எடுத்து வைத்தார். கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தனுஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

விமர்சனம்
சுவாரஸ்யமான திரைக்கதை, துடிப்பான பாடல்கள் என இளைஞர்களை கவரும் அம்சங்கள் நிரம்பிய இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிமுகமாகிவிட்ட யுவன் ஷங்கர் ராஜாவின் இசைப் பயணத்தில் இந்தப் படம் ஒரு முக்கியமான திருப்புமுனை. ஆனால் இந்தப் படத்தின் நாயகனாக மிக ஒல்லியான தேகம், மீசை அரும்பாத முகம், ஆகியவற்றுடன் அறிமுகமான தனுஷ் பெரும்பாலான விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கண்டுகொள்ளப்படவில்லை. சிலர் அவருடைய ஒல்லியான உடல்வாகுக்காக கிண்டலடிக்கவும் செய்தார்கள். இன்று தனுஷ் அடைந்திருக்கும் உயரத்தை அன்று யாருமே யூகித்திடவில்லை. எந்த ஒல்லியான தேகத்துக்காகக் கிண்டலடிக்கப்பட்டாரோ அதையே தனது வெற்றிக்கான மூல தனங்களில் ஒன்றாக ஆக்கிக்கொண்டார். அதையே ஒரு ட்ரெண்டாக மாற்றினார்.

அடுத்தடுத்த வளர்ச்சி
அடுத்தடுத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை என நடிப்பில் மெருகேறிய தனுஷ், அதன் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். சில ஆண்டுகளில் வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வந்தன. மீண்டும் அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து 'புதுப்பேட்டை' படத்தில் நடித்தார். அதில் ஒரு ஏழைச் சிறுவனாக இருந்து படிப்படியாக முன்னேறும் ஒரு அசல் கேங்ஸ்டராக வாழ்ந்து காட்டினார். கேங்ஸ்டர் படங்களில் 'புதுப்பேட்டை; மிக முக்கியமான படமாக விளங்குகிறது.

இயக்குநர் வெற்றிமாறனின் அறிமுகப் படமான 'பொல்லாதவன்; தனுஷின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் சில படிகள் உயர்த்தியது. அடுத்தாக வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' திரைப்படத்தில் துடிப்பு மிக்க மதுரைக்கார இளைஞனாக நடித்ததற்காக முதல் தேசிய விருதைப் பெற்றார் தனுஷ். அப்போது அவருக்கு 30 வயதுகூட ஆகியிருக்கவில்லை. மிக இளம் வயதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர்களில் ஒருவரானார் தனுஷ்.

கொலவெறி புகழ்
மேலும் இவர் எழுதி பாடிய 'Why This Kolaveri' பாடல் அவரை உலகம் முழுக்க பிரபலமாக்கியது. இணையத்தின் அசுர வளர்ச்சியை தமிழில் முதல்முறையாக அறுவடை செய்த பாடல் இதுதான். இதன்மூலம் தமிழ் தெரியாத முகங்களுக்கு கூட தனுஷ் பரிட்சயமானார். ரத்தன் டாட்டாவுடன் சந்திப்பு, மன்மோகன் சிங்குடன் விருந்து என ஒரே இரவில் இந்தியாவின் விஐபி ஆனார் தனுஷ்.

ஹிந்தி அறிமுகம்
2013-ம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் ஹிந்தி நடிகராக பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அதன் மாபெரும் வெற்றியின் மூலம் தேசமே கொண்டாடும் கலைஞனாக மாறினார்.நடிப்பு மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என தொட்டதில் எல்லாம் சிக்ஸர் அடித்து ஒரு பன்முக கலைஞராக வலம் வரும் தனுஷ், கோலிவுட், பாலிவுட் என எல்லைகளைக் கடந்து இன்று வரை ஹாலிவுட்டிலும் கால் பதித்த தமிழ் நடிகர்களில் இவரே குறிப்பிடத்தக்கவர்

தயாரிப்பாளர்
'காக்கா முட்டை', 'விசாரணை' என அவர் தயாரித்த திரைப்படங்கள் சர்வதேச, தேசிய அங்கீகாரங்களைக் குவித்தன. சூப்பர் ஸ்டாரும் தனது மாமனாருமான ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது கூட கமர்ஷியல் மசாலா படங்களை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த 'காலா' படத்தைத் தயாரித்தார். பா.இரஞ்சித் இயக்கிய அந்தப் படம் அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமையைப் பேசியது.


இயக்குனர்

இது தவிர 'பா.பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராகவும் தடம் பதித்த தனுஷ் அந்தப் படத்தில் இரண்டு முதியவர்களுக்கு இடையிலான முதிர்ச்சியான காதலை மிக அழகாகச் சொல்லி முதல் படத்திலேயே மனமுதிர்ச்சியும் விசாலமான பார்வையும் கொண்ட படைப்பாளியாக அறிமுகமானார்.

ஒரு சாதாரண ஒல்லியான தேகம் கொண்ட விடலைப் பயனாக அறிமுகமான தனுஷ் இன்று தன் சாதனைகளால் பிரம்மாண்டமான ஆகிருதியைப் பெற்றிருக்கிறார். திரைப்படங்கள் என்னும் சட்டகத்துக்குள்ளேயே அசலான பன்முகத் திறமையாளர்களில் ஒருவராக பரிணமித்து அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவருகிறார். இருபதே ஆண்டுக் காலத்தில் மிகப் பெரிய அளவில் உயர்ந்து நிற்கும் தனுஷ் வரும் ஆண்டுகளில் இன்னும் பல சாதனைகள் படைப்பர் என்பதில் சந்தேகம் இல்லை .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.