பற்றி எரியும் தீவு – இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்!

இலங்கையில், பெட்ரோல், டீசல் விலை விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

அண்டை நாடான இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதால், அந்நாட்டில், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் கேஸ், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், தொடர் மின் வெட்டு காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

இலங்கையின் இந்த மோசமான நிலைமைக்கு, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் காரணம் எனக் கூறி, பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் பொது மக்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக, ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இலங்கை வன்முறையால் தமிழகத்திற்கு ஆபத்து? – மத்திய அரசு வார்னிங்!

இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் ராஜபக்சே ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி அவர்களை ஓட ஓட விரட்டினர். மேலும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதற்கிடையே பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்து, அரசு அலுவலகத்தில் இருந்து வெளியேறி, திரிகோணமலையில் தலைமறைவாகி உள்ளார். இதேப் போல் அவரது குடும்ப உறுப்பினர்களும் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளியேறி ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கை முழுவதும் தற்போது வன்முறைக்களமாக காட்சி அளிக்கிறது. எங்குப் பார்த்தாலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன.

இந்நிலையில், இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனையை சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெட்ரோல்,டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.