மரக்காணம் வாலிபர் கொலை 5 பேரிடம் போலீஸ் விசாரணை| Dinamalar

புதுச்சேரி : மரக்காணத்தைச் சேர்ந்த வாலிபர் புதுச்சேரி மார்க்கெட் கமிட்டியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் பின்புற புதரில், வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் நேற்று காலை இறந்து கிடந்தார்.

தகவலறிந்து வந்த கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கூனிமேட்டை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் ஷேக் திப்பு சுல்தான், 29; என்பது தெரிந்தது.அப்பகுதியில் டீகடை நடத்தி வந்த அவர், பலரிடம் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

நேற்று முன்தினம் அவர், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் ஜூஸ் கடை நடத்தி வரும் நண்பர் கவியரசனுடன் பைக்கில் புதுச்சேரி வந்தார்.ரெயின்போ நகரில் வந்தபோது, ஒரு கும்பல் வழிமறித்து, கடனை திருப்பிக் கேட்டு மிரட்டியது. உடன், ஷேக் திப்பு சுல்தான் தனது தந்தையை மொபைல் போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறி, பணம் கடன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.அவரது தந்தையும் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். ஆனால், இதற்கு உடன்படாத அந்த கும்பல், கவியரசனை விரட்டிவிட்டு ஷேக் திப்பு சுல்தானை கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து, சடலத்தை வீசி தப்பிச் சென்றது தெரிந்தது.இச்சம்பவம் தொடர்பாக சாரம் பகுதியைச் சேர்ந்த சிவா, மூலக்குளம் தெஸ்தான், குருமாம்பட்டு ராஜேஷ் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.ஷேக் திப்பு சுல்தானுக்கு திருமணமாகி, மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.