யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளின் சிறைகைதிகளின் முன்னாள் பொறுப்பாளர் அடித்து கொலை!

இலங்கை யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளின் சிறைகைதிகளின் முன்னாள் பொறுப்பாளர் அடித்து கொலை செய்யப்பட்டநிலையில், இன்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக தற்போது இலங்கை கலவர பூமியாக மாறியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகக்கோரி, கடந்த ஒருமாதகாலமாக காலிமுகத்திடலில் அந்நாட்டு மக்கள் அமைதியாக போராடியநிலையில், பதவி விலகுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்களை தாக்கியதால் வன்முறை ஏற்பட்டது.
இதனால் கொதித்தெழுந்த மக்கள், மகிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு உள்பட ஆளும் எம்பிக்களின் பலரது வீட்டை தீ வைத்து கொழுத்தினர். இதனால் பொதுத்சேதத்திற்கு தீங்கு விளைவிப்போர் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் பதவி விலகிய மகிந்த ராஜபக்சே பாதுகாப்பு காரணமாக திரிகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 
image
இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில், ஆண் ஒருவரது உடல் புதைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நீதவான் நீதிமன்ற நீதிபதி ஸ்மையில் ஜெமில் தலைமையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இதில், விடுதலைப்புலிகளின் சிறைக்கைதிகளின் முன்னாள் பொறுப்பாளர் இராசன் சிவஞானம் என்பது தெரியவந்தது. அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும், அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து கொலை தொடர்பான சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மருதங்கேணி காவல்நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.