ரூ.4 கோடி போதை பொருள் கடத்திய பெண் கைது; இன்றைய கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

இந்திய நிகழ்வுகள்

ரூ.4 கோடி போதை பொருளை வயிற்றில் கடத்திய பெண் கைது

கோவை : கோவை வந்த விமானத்தில் ‘அயன்’ சினிமா பட பாணியில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை மாத்திரைகளாக விழுங்கி வயிற்றில் பதுக்கி கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜாவில் இருந்து ‘ஏர் அரேபியா’ விமானம் மே 6ம் தேதி காலை கோவை வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணியரை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது ஆப்ரிக்க நாடான உகாண்டாவைச் சேர்ந்த பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர்.அவர் உகாண்டாவைச் சேர்ந்த சான்ட்ரா நான்டசா 33 என்பதும் திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறையினரை சந்திக்க வந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதிகாரிகளின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் வலுத்தது.இதையடுத்து அப்பெண்ணை ஸ்கேன் செய்து பார்த்த போது அயன் சினிமா பட பாணியில் போதைப்பொருளை கேப்சூலில் அடைத்து விழுங்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பெண் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையில் வைக்கப்பட்டார்.அவர் வயிற்றிலிருந்த கேப்சூல்களை டாக்டர்கள் எடுத்தனர். பின் மருத்துவ கண்காணிப்பில் வைத்து அதிகாரிகள் அவரை கண்காணித்து வந்தனர்.மூன்று நாட்களில் பெண்ணின் வயிற்றில் இருந்து 81 கேப்சூல்களை அதிகாரிகள் வெளியே எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.

அப்போது கடத்தி வரப்பட்டது ‘மெத்தாபெத்தமைன்’ என்ற போதை மருந்து என்பதும் இதன் சர்வதேச சந்தை மதிப்பு 4 கோடி ரூபாய் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த போதை பொருள் எங்கிருந்து யாருக்காக கோவைக்கு கடத்தப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.நேற்று மதியம் சுங்கத்துறை அதிகாரிகள் உகாண்டா பெண்ணை கைது செய்து கோவை மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை சென்னை புழல் சிறையில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தந்தை கொலை மகனுக்கு வலை

latest tamil news

சேத்தியாத்தோப்பு : திருமணமாகாத விரக்தியில் தந்தையை கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதியைச் சேர்ந்தவர் லுார்துசாமி, 75. இவரது மூத்த மகன் ஜான்சன், 35. இவர் மே 7ம் தேதி மாலை, தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு லுார்துசாமியிடம் தகராறு செய்து, அவரை தாக்கினார்.படுகாயமடைந்த லுார்துசாமி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.லுார்துசாமியின் இளைய மகன் ஜான்பிரிட்டோ கொடுத்த புகாரில், ஜான்சன் மீது சோழத்தரம் போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். லுார்துசாமி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, ஜான்சனை தேடி வருகின்றனர்.

தகராறில் கட்டை விரலை கடித்து துப்பியவர் உட்பட 4 பேருக்கு வலை

காட்டுமன்னார்கோவில் : வீராணந்தபுரத்தில் நடந்த ஊர் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் கட்டை விரலை கடித்து துப்பிய போதை நபர் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணந்தபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 40. அதேப் பகுதியைச் சேர்ந்தவர்வெங்கடாசலம் மகன் செல்வமணி.இருவருக்கும் முன்விரோதம் இருந்தது.

நேற்றுமுன்தினம் ஊர் தலைவர் தேர்வு குறித்த கூட்டம் வீராணந்தபுரம் அம்மன் கோவில் அருகில் நடந்தது. கூட்டத்தில்செல்வமணி குடிபோதையில் தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து ஆபாசமாக பேசினார்.இதனை கண்ணன் தட்டிக்கேட்டதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த செல்வமணி மற்றும் அவரது அண்ணன் மாசிலாமணி மகன் அலெக்சாண்டர், உறவினர்கள் அரசன் மகன் பூராசாமி, வில்லு மகன்மூர்த்தி ஆகியோர் கண்ணனை உருட்டுக் கட்டையால் தாக்கினர்.

பின், செல்வமணியும், கண்ணனும்கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். அப்போது திடீரென செல்வமணி, கண்ணனின் வலது கை கட்டை விரலை கடித்து துப்பினார். பலத்த காயமடைந்த கண்ணனை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு, செய்து செல்வமணி,அலெக்சாண்டர், பூராசாமி, மூர்த்தி ஆகிய நால்வரை தேடி வருகின்றனர்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம் ஊராட்சி செயலர் கைது

திருவாரூர் : குடவாசல் அருகே 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது செய்யப்பட்டார்.திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, விக்கிரபாண்டியம் ஊராட்சியில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பணிகள் நடக்கின்றன. இதற்கான தொகை நான்கு தவணைகளாக, 1.18 லட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

latest tamil news

இத்திட்டத்தில் பயன்பெற, அதே ஊரைச் சேர்ந்த குமார், 39 என்பவர், அவரது மனைவி பெயரில் விண்ணப்பித்துள்ளார். இவரிடம், ஊராட்சி செயலரான மற்றொரு குமார், 42, என்பவர், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.பணம் கொடுக்க விரும்பாத குமார், திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். டி,எஸ்.பி., நந்தகோபால் தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய போது ஊராட்சி செயலர் குமாரை கையும், களவுமாக கைது செய்தனர்.

பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு

அரியாங்குப்பம் : முதலியார்பேட்டையில் பொது இடத்தில் பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். முதலியார்பேட்டை அவ்வை நகரை சேர்ந்தவர் தமிழ், 37; இவர் தனது குடும்ப சுப நிகழ்ச்சிக்காக , முதலியார்பேட்டை தபால் நிலையம் அருகே பேனர் வைத்துள்ளார். இந்த பேனரால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. பல நாட்கள் ஆகியும் பேனரை அவர் அகற்றவில்லை. முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் இளவரசன், பேனர் வைத்த தமிழ் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

சொத்து தகராறில் கத்தி வெட்டு ஒருவர் கைது: 4 பேருக்கு வலை

அரியாங்குப்பம் : சொத்து தகராறில் வீடு புகுந்து உறவினரை கத்தியால் வெட்டியது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டை பாரதிதாசன் தெரு, தாமரை நகரை சேர்ந்தவர் கமலஹாசன், 40; முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ், 38; உறவினரான இவர்களுக்கிடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு நகராஜ், அவரது தாய் சரளா, தம்பி மதிவாணன் உள்ளிட்ட 5 பேர் கமலஹாசன் வீட்டில் புகுந்து, அவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, மதிவாணன், 32; என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நகராஜ் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

சிறுமியை கடத்திய வாலிபர் கைது

காரைக்கால் : காரைக்காலில் சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் அடுத்த நடப்பூர் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்(24). இவர், காரைக்காலை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு சிறுமியை கடத்தி சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

நகர போலீசார் சதிஷ் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.இந்நிலையில், சதீஷ் மொபைல் போன் சிக்னல் மூலம் அவர் இவர் சிவகங்கையில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.எஸ்.பி., சுப்ரமணியன் உத்தரவின்பேரில், சிவகங்கை விரைந்த தனிப்படை போலீசார் சதீஷை கைது செய்து நேற்று அழைத்து வந்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மனைவியை பிரிந்த கணவர் தற்கொலை

புதுச்சேரி : மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த ஆட்டோ டிரைவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி, உப்பளத்தைச் சேர்ந்தவர் ஜான் லுாயிஸ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அன்னம்மாள் (எ) சவுரியம்மாள். திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர்.கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அன்னம்மாள் கணவரை பிரிந்து, தனியாக வசித்து வருகிறார். இதனால் மனமுடைந்த ஜான் லுாயிஸ் அடிக்கடி மது அருந்தினார். நேற்று முன்தினம் கனகராய வீதியில் நிறுத்தியிருந்த தனது ஆட்டோவில் அவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மருமகனை மிதித்து கொன்ற மாமனார், மைத்துனர் கைது

துமகூரு: கள்ளக்காதலை கைவிட மறுத்த மருமகனை, அவரது மாமனாரும், மைத்துனரும் சேர்ந்து மர்ம உறுப்பில் மிதித்து கொலை செய்தனர்.துமகூரின் குப்பி அருகே உள்ள சவுகேனஹள்ளியைச் சேர்ந்தவர் மொத்லய்யா, 40. நேற்று காலை இவர், கரிஷெட்டிஹள்ளி என்ற இடத்தில், மர்ம உறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

போலீசார் விசாரணையில், மொத்லய்யாவின் மாமனார் ஐய்யண்ணா, 65; மைத்துனர் சோமசேகர், 30 ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.விசாரணையில் கிடைத்த தகவல்கள்:ஐய்யண்ணாவின் மகள் சுமித்ராவுக்கும், மொத்லய்யாவுக்கும் ஆறு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் கணவன், வேறு பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்தாராம். இது பற்றி தந்தையிடம் மகள் புகார் செய்தார்.மருமகனை அழைத்த மாமனார், பிற பெண்கள் சகவாசத்தை விட்டு, ஒழுங்காக மகளுடன் குடும்பம் நடத்து என புத்திமதி கூறினார்.

ஆனாலும், அவர் கள்ளத்தொடர்பை விடவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கரிஷெட்டிஹள்ளி வழியே மருமகன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, அந்த வழியாக மகனுடன் சென்ற மாமனார், மருமகனை வழிமறித்து கீழே தள்ளினார். இருவரும் சேர்ந்து, மர்ம உறுப்பில் உதைத்து மொத்லய்யாவை கொன்றனர். பின், உடலை சாலையோரம் வீசி சென்றது தெரியவந்தது. மாமனார் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.