திருச்சூர் பூரம் திருவிழா- வாண வேடிக்கை 15ந் தேதிக்கு ஒத்திவைப்பு

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திருச்சூர் வடக்கு நாதன் கோவிலும் ஒன்று. ஆண்டுதோறும் இங்கு மலையாள மேடம் மாதத்தில் பூரம் திருவிழா நடைபெறும். விழாவில் இடம்பெறும் யானைகள் அணிவகுப்பு, வாண வேடிக்கை நிகழ்ச்சிகளை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

கொரோனா பிரச்சினையால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் யானைகள் அணிவகுப்பும், குடைமாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று அதிகாலை வாண வேடிக்கை நடக்க இருந்தது.

ஆனால் கேரளா முழுவதும் மழை பெய்து வந்ததால் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறவில்லை. மழை நின்றதும் வாண வேடிக்கை நடைபெறும் என்று கூறப்பட்டது. நேற்று பகல் மழை பெய்யாததால் இரவில் வாண வேடிக்கை நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்றிரவு மீண்டும் மழை பெய்தது. இதனால் வாண வேடிக்கை நிகழ்ச்சி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் வாண வேடிக்கையை வருகிற 15ந் தேதி நடத்தலாம் என கோவில் விழா குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.