நெற்றியில் 3 தையல் போட்ட மறுநாளே படப்பிடிப்புக்கு வந்த மஞ்சு வாரியர்

மலையாள திரையுலகில் கனமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது என்றால் முதலிடத்தில் இருப்பது அனுபவமிக்க நடிகையான மஞ்சு வாரியர் தான். அதனால்தான் தற்போது அஜித் படத்தில் நடிக்கும் அளவிற்கு தமிழிலும் அவருக்கான வரவேற்பு கூடியுள்ளது. இந்த நிலையில் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஜாக் அண்ட் ஜில் என்கிற படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் மஞ்சுவாரியர் ஆக்சன் காட்சிகளிலும் மிரட்டி உள்ளாராம்.

இந்தப் படத்தில் மஞ்சு வாரியாரின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரேணு சவுந்தர் என்பவர் மஞ்சுவாரியருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்தில் கூறும்போது, “அவரைப் போன்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஒரு நடிகையை பார்ப்பது ரொம்பவே அரிது. படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நெருங்கும் சமயத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது எதிர்பாராமல் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

நான் கூட அது சினிமாவுக்காக பயன்படுத்தப்படும் சாயம் என்றுதான் முதலில் நினைத்தேன். அதன்பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நெற்றியில் மூன்று தையல்கள் போடப்படும் அளவுக்கு நிலைமை சீரியசானது. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு கூறியும் தன்னால் படப்பிடிப்பு தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக மறுநாள் காலையிலேயே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் மஞ்சுவாரியர். அவர் இந்த இடத்தில் இருக்கிறார் என்றால் அவரது அர்ப்பணிப்பு உணர்வுதான் காரணம்” என்று தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார் ரேணு சவுந்தர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.