மெல்பர்ன்: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட இடத்தில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போலவே தோற்றம் உடைய நபர் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலியாவில், 21ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாடு முழுதும் நடந்து வருகிறது. தேர்தலில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.இதையடுத்து, பிரதமர் ஸ்காட் மோரிசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று, ஆஸ்திரேலியாவின் சிஸ்ஹாம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில், பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், அங்கிருந்து வெளியேறிய பின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போலவே தோற்றம் உடைய நபர், தொழிற்சாலைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. ‘கிம் ஜாங் உன் எப்படி இங்கு வந்தார்’ என, சிலருக்கு குழப்பமும் ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”என் பெயர் ஹாவர்ட் எக்ஸ். நான், கிம் ஜாங் உன் போலவே தோற்றம் உடையவன். ஆளும் கூட்டணி அரசுக்கு மக்கள் ஓட்டளிப்பதும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டளிப்பதும் ஒன்று தான்,” என்றார். பிரதமரின் ஊடக பிரிவை சேர்ந்த நபர், ஹாவர்ட் எக்சை வெளியேறுமாறு கூறினார். அதற்கு, ”ஒரு மிகப்பெரிய தலைவர் என்ன செய்ய வேண்டும் என்பதை, நீ கூறாதே,” என்றார். அங்கிருந்த போலீசார் ஹாவர்ட் எக்சிடம் விசாரணை நடத்தினர்.கடந்த 2018ல், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், சிங்கப்பூரில் சந்தித்த நிகழ்வின் போது, ஹாவர்ட் எக்ஸ் அங்கு சென்று, தலைப்பு செய்தியில் இடம் பெற்றார்.
Advertisement