குப்பை மேட்டில் குண்டுவெடித்து 17 வயது சிறுவன் பலி

கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் குப்பைக் கிடங்கில் குண்டு வெடித்ததில் 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 
கொல்கத்தாவில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள அஜம்தலா என்ற இடத்தில் உள்ள குப்பைக் கிடங்கில், இன்று காலை ஊழியர் ஒருவர் குப்பை மேட்டை அகற்றியபோது ஒரு பாக்சை கண்டெடுத்தார். அப்போது அவரது 17 வயது மகன் ஷேக் சலீம், அந்த பாக்சை வாங்கி அருகில் உள்ள மின்கம்பத்தின் மீது வீசி எறிந்தான். அப்போது அந்த பெட்டியில் வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. 
இதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த ஷேக், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் மருத்துவமனை செல்வதற்குள் அவன் உயிரிழந்துவிட்டான்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.