கறம்பக்குடி அருகே பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தையின் சடலத்தை நாய் ஒன்று இழுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதி ஊராட்சியில் உள்ள சின்னான்கோன் விடுதி பெரியார் சமத்துவபுரம் குடியிருப்பு பின்புறம், பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலத்தை நாய் ஒன்று கவ்வி இழுத்து வந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நாயை விரட்டி விட்டு அக்குழந்தையின் சடலத்தை மீட்டு காவல்துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் அங்கு வந்த ஒடப்பவிடுதி கிராம நிர்வாக அலுவலர் ஜெயமணி, ரெகுநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை யாரேனும் வீசிச் சென்றார்களா, அந்த குழந்தையின் சடலம் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM