வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வு தொடங்கியது: ஒரு கிலோ மீட்டருக்கு போலீஸ் குவிப்பு

வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வு தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணி முதல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த அம்மனுக்கு பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் சிங்கார கவுரி அம்மனுக்கு, தினமும் பூஜை நடத்த அனுமதி கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த குழு அமைத்தது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் வாராணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கள ஆய்வை 17-ம் தேதிக்குள் முடித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இம்மனுவை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு பரிசீலித்தது. பின்னர் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில், “இன்னும் வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்க்காததால். இப்போது கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது” என்று கூறினார். எனினும் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் மசூதியில் ஆய்வு தொடங்கியுள்ளது. ஆய்வுக் குழுவில் வழக்கறிஞர் ஆணையர் அஜய்குமார் மிஸ்ரா, சிறப்பு வழக்கறிஞர் விஷால் சிங், துணை வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங், மனுதாரர்கள், அவர்களின் வழக்கறிஞர்கள் ஆகியோர் என மொத்தம் 36 பேர் கள ஆய்வுக்காக கியான்வாபி மசுதிக்கு வந்தனர்.

மசூதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.