அ.தி.மு.க-வை உன்னத நிலைக்கு நானே அழைத்துச் செல்வேன்: சசிகலா

எதிர்க் கட்சிகள் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும் அதிமுகவை உன்னத நிலைக்கு நானே அழைத்துச் செல்வேன் என்று சசிகலா நடராஜன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சசிகலாவின் உதவியாளர் ஆதவன் என்பவரின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த கழக தொண்டர்களுக்கும், கழகம் ஒன்றுபட வேண்டும் என ஏங்கித் தவிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனையோ தொண்டர்களின் தியாகத்தால் உருவான இயக்கம். எதிர்க்கட்சிகள் எத்தனை கணக்குகள் போட்டாலும் நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த இயக்கம் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்துள்ளது. புரட்சித் தலைவர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதே சோதனை காலம் தற்போது புரட்சித் தலைவி அம்மா மறைவிற்கு பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ளது.
அன்றைக்கு எவ்வாறு கழகம் மீண்டும் எழுந்து வநததோ அதேபோன்று தற்போதும் புதுப்பொலிவு பெற்று உன்னத நிலையை அடையும் என்பதில் ஐயமில்லை.

கழக தொண்டர்கள் கைகாட்டும் வரை நிர்வாகிகள் நிலைக்கலாம். ஆனால், அந்த கடைக்கோடி தொண்டன் நிமிர்ந்தால் தான் கழகம் நிமிரும் என்பதை எந்நாளும் மறக்காதீர்கள்.

அதிமுக உன்னத நிலையை அடைய நானே காரணமாக இருப்பேன். அதுவரை ஓயமாட்டேன் என்பதை அனைவருக்கும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகத்தைக் காப்பாற்ற உகந்த நேரம் வந்துவிட்டது. அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து தன்னிகரில்லா பேரியக்கமாக உருவாக்குகின்ற உயர்ந்த பணியில் ஈடுபட்டு வரும் வேளையில், பொறுமையைக் கடைபிடியுங்கள். கண்டிப்பாக புகழ் உங்களை வந்தடையும்” என்று சசிகலா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.