இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது: ராஜ்நாத் சிங்!

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ஐசிஏஐ) மத்திய இந்திய பிராந்திய குழுவின் லக்னோ கிளை ஏற்பாடு செய்த நிதிச் சந்தை குறித்த பயிலரங்கில் பாதுகாப்பு அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பொருளாதாரம் தொடர்பான புதிய முன்னேற்றங்களைப் பற்றி பங்கேற்பாளர்களுக்கு தெரியப்படுத்தி இந்தத் துறையுடன் தொடர்புடைய எதிர்காலச் சவால்களைச் சமாளிக்க அவர்களைப் பயிற்றுவிப்பதும் ஊக்குவிப்பதும் பயிலரங்கின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.

வணிகச் சூழலை சரியான திசையில் வழிநடத்துவதில் பட்டயக் கணக்காளர்களின் பங்களிப்பைப் பாராட்டினார். நிதி மேலாண்மை மற்றும் பொருளாதார தணிக்கையின் முதுகெலும்பு என்று நிகழ்ச்சியில் பேசிய
ராஜ்நாத் சிங்
விவரித்தார்.

“நாட்டின் எல்லைகளை துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் பாதுகாக்கும் நமது ஆயுதப் படை வீரர்களைப் போலவே, நமது கணக்காளர்கள் நிதி அமைப்பின் மனசாட்சியின் காவலர்கள் ஆவர். எனவே, தங்கள் கடமைகளைச் செய்யும் போது நேர்மையை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பெருந்தொற்று மற்றும் இப்போதைய ரஷ்யா-உக்ரைன் மோதலால் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி இடையூறுகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து இடையூறுகள் காரணமாக உலகப் பொருளாதாரம் மிகவும் கடினமான கட்டத்தில் இருக்கிறது என்று ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.
கொரோனா
பெருந்தொற்றுக்கு இடையே அரசு எடுத்த முழுமூச்சான முயற்சிகளின் காரணமாக
இந்திய பொருளாதாரம்
‘வி’ வடிவ மீட்சி அடைந்து வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய மற்றும் சர்வதேச தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான அரசின் உறுதியை உறுதிப்படுத்திய அவர், வெளிநாட்டு சந்தைகளுக்கான அணுகலை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.