தபால் துறையில் 38,926 பேருக்கு வேலை: தேர்வு கிடையாது; இந்த 4 விஷயங்களை சரியா பண்ணுங்க!

India post recruitment 2022 for 38926 GDS posts important application process details: இந்திய தபால் துறை நாடு முழுவதும், கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். எனவே பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கே வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் நீங்கள் முக்கியமான 4 விஷயங்களை சரியாக செய்தால், நீங்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் உங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. அவை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் (BPM) மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கிராம தபால் சேவை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 38,926

தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை – 4,310

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : கிராம தபால் ஊழியர் (BPM) – ரூ.12,000

உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) – ரூ.10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2022

விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

இந்த பணியிடங்களில், கடந்த முறை பெரும்பாலும் 97 சராசரி மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே வேலை கிடைத்துள்ளது. குறைந்தப்பட்சமாக 87 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும் வேலை கிடைத்துள்ளது. இதன்மூலம், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது தெரிகிறது.

இருப்பினும் கீழ்கண்ட 4 விஷயங்களை நீங்கள் சரியாக செய்தால், நீங்கள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் உங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களும் இந்த விஷயங்களை சரியாக செய்வது முக்கியம். இல்லையெனில் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். அல்லது சான்றிதழ் சரிபார்ப்பின்போது, நீங்கள் நிராகரிக்கப்படலாம். அவை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

முதலில் விண்ணப்பிக்கும்போது, உங்கள் தனிப்பட்ட விவரங்களை சரியாக உள்ளிட வேண்டும். குறிப்பாக உங்கள் சமூகம் (சாதி) குறித்த விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும். இல்லையென்றால் சான்றிதழ் சரிபார்ப்பில் நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள்.

அடுத்ததாக புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை சரியான அளவில் பதிவேற்றிக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக நீங்கள் 10 வகுப்பு படித்த வாரியம் (ஸ்டேட்போர்டு அல்லது மெட்ரிக் அல்லது சிபிஎஸ்இ) எது என்பதை சரியாக தேர்தெடுத்துக் கொள்ளுங்கள். 2011 செப்டம்பருக்கு முன்னதாக படித்தவர்களுக்கு தனிப் பிரிவும், அதன் பின் படித்தவர்களுக்கு தனிப்பிரிவும் வாரியப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அது எது என்பதை சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: SSC Recruitment 2022; மத்திய அரசில் 2065 பணியிடங்கள்; 10th, 12th, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அடுத்ததாக மிக முக்கியமானது பணியிடங்களுக்கான முன்னுரிமை. இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு முறை சம்பந்தப்பட்ட கிராம தபால் நிலையங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் யார் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கே வேலை கிடைக்கும். அதாவது நாம் விண்ணப்பிக்கும்போது, மாவட்டம், தலைமை தபால் நிலையம், துணை தபால் நிலையம், கிராம தபால் நிலையம் என்ற வரிசையில் தேர்வு செய்து விண்ணப்பிப்போம். ஒருவருக்கு 5க்கு மேற்பட்ட விருப்பங்கள் வழங்கப்படும். நீங்கள் விண்ணப்பித்த கிராம தபால் நிலைய பதவிக்கு, உங்களை விட பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால், உங்களுக்கு வேலை கிடைக்கும்.

இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறை, மாநிலம் அல்லது இந்தியா முழுமைக்கான தரவரிசைப் பட்டியல் மூலம் நிரப்பப்படுவது கிடையாது. குறிப்பிட்ட கிராம தபால் நிலையத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இடையே மட்டுமே போட்டி இருக்கும். இருப்பினும் நீங்கள் விண்ணப்பிக்கும் பகுதிக்கு வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால் உங்களுக்கு வேலை கிடைக்கும். எனவே பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அப்ளை பண்ணுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.