காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வேதபாராயணம்-சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின்போது வேத பாராயணம் செய்வது குறித்து வடகலை – தென்கலை பிரச்னையில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின்போது, வடகலை பிரிவினர் வேத பாராயணம் செய்ய அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு வடகலை பிரிவினர் வேதபாராயணம் செய்வதற்கு அனுமதி மறுத்து, அறநிலையத்துறை உதவி ஆணையர், கடந்த மே 14-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தடைவிதிக்கக்கோரியும் நாராயணன் என்பவர் அவசர வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையேயான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஒரு பிரிவினருக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது சட்டவிரோதம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
image
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக்சுந்தரம் ஆஜராகி, இந்த விவகாரத்தில் தினசரி பிரச்னை ஏற்படுவதாலும், சாதாரண பக்தர்கள் முறையாக தரிசிக்க முடியாததாலும், அதை ஒழுங்குபடுத்துவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், தென்கலை பிரிவினருக்கு மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்தது பாரபட்சமானது எனக் கூறி, அறநிலையத்துறை உத்தரவு பிறப்பிக்கும் முன்பு உள்ள நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.