மசூதி வளாகத்துக்கு சீல் வைத்த கோர்ட் உத்தரவு… பிரதமர் மோடி தொகுதியில் பரபரப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.

இதன் வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த மூன்று நாட்களாக ஞானவாபி மசூதி வளாகத்தில் நடைபெற்ற கள ஆய்வு இன்று நிறைவடைந்தது. இதில் முக்கிய அம்சமாக ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட பகுதிக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு வாரணாசி நீிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பகுதிக்குள் யாரும் நுழையக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாதுகாப்புக்கு அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு செய்ய தடை கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.