ஐபிஎல் கிரிக்கெட்- மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி

மும்பை:
ஐபிஎல் தொடரின் 65-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி 44 பந்துகளில் 3 சிக்சர், 9 பவுண்டரியுடன் 76 ரன்களை குவித்து அவுட்டானர். 
பிரியம் கார்க் 26 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  நிகோலஸ் பூரன் 22 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.  மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ரமன்தீப் சிங் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். 
இதையடுத்து, 194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில், தொடக்க வீரரும், கேப்டனுமான ரோகித் சர்மா36 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். இஷான் கிஷன் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டேனியல் சாம்ஸ் 15 ரன்னும், திலக் வர்மா 8 ரன்னுடனும் வெளியேறினர். 
அபாரமாக விளையாடிய திம் டேவிட் 18 பந்துகளில் 4 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் குவித்த நிலையில் ரன் அவுட்டானார். ரமன்தீப் சிங் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார். 
மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் அடித்தது. இதனால் ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.