காஞ்சி | வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில், தென்கலை பிரிவினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்து கோயில் உதவி ஆணையர், கடந்த 14-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து வடகலை பிரிவைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‘உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வடகலை பிரிவினரையும் வேத பாராயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஒரு பிரிவினருக்கு மட்டும் அனுமதி மறுத்திருப்பது சட்ட விரோதமானது’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்த மே 14-ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வடகலை பிரிவினர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “கோயில் விழாக்கள் மீது அறநிலையத் துறைக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இரு தரப்பினரையும் பாராயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும், ஒரே கடவுளை வழிபடும் இரு பிரிவினருக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 10 மாதங்கள் வடகலை பிரிவினர் வேத பாராயணம் பாட அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகலை பிரிவினரின் உரிமைகள் மீது எப்போதும் தலையீடு உள்ளது. எனவே, வடகலை பிரிவினரின் உரிமையை பாதுகாக்க வேண்டும். 11 நொடிகள் வடகலை பிரிவினரின் மந்திரங்களை கூறுவதால் சுவாமி ஊர்வலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை” என வாதிடப்பட்டது.

அப்போது தென்கலை பிரிவினர் தரப்பில், “முந்தைய ஆண்டுகளில் இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, இது புதிதல்ல. கோயில் உதவி ஆணையர் உத்தரவை நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. ஏதேனும் குறை இருந்தால் அறநிலையத் துறை இணை ஆணையர், ஆணையரிடம்தான் முறையிட முடியும். வடகலை பிரிவினருடன் கலந்து பேசிய பிறகுதான் உதவி ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வாதிடப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில், விழாவை முறைப்படுத்தவும், ஊர்வலங்களில் தடை செய்யப்பட்ட பாடல்களை பாடியதுடன், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விடாமல் தடுத்ததால்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, “நாலாயிர திவ்யபிரபந்தம் தமிழ் மொழியில் உள்ளதால், தமிழர்கள் மட்டுமின்றி, கன்னடர்களும், தெலுங்கர்களும் இதை பாடுவதால், நாலாயிர திவ்ய பிரபந்தம், திராவிட பிரபந்தம், திராவிட வேதம் என்று குறிப்பிட்டார். நாட்டில் பல பிரச்சினைகள் நிலவுவதை சுட்டிக்காட்டிய நீதிபதி, கோயிலுக்கு 50 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால் இரு தரப்பினரும் ஓடி விடுவர். இரு பிரிவினரும் ஒரே மந்திரத்தை உச்சரிக்க உள்ள நிலையில், வடகலை பிரிவினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்” என கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும், சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும். இதனை கோயில் உதவி ஆணையர் முறைப்படுத்த வேண்டும் . தென்கலை பிரிவினர் முதலில் ஸ்ரீ சைல தயாபத்ரம் வாசிக்கவும், அதன்பின்னர் வடகலை பிரிவினர் ஸ்ரீ ராமானுஜ தயாபத்ரம் வாசிக்கவும் வேண்டும்.

அதன் பின்னர் தென்கலை, வடகலை, பிற பக்தர்கள் இணைந்து நாலாயிர திவ்விய பிரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும். அதன்பின்னர் தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள் வாலி திருநாமமும், வடகலை பிரிவினர் தேசிகம் வாலி திருநாமமும் பாட அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக விரிவான ஏற்பாடுகளை உதவி ஆணையர் மேற்கொள்ளவும், இந்த நடைமுறைகளை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி, அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மே 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.